செவ்வாய், 7 மே, 2013

'The Princess' - புத்தகம் பற்றிய பார்வை (பகுதி-2)

முதல் பகுதி படிக்க இங்கே கிளிக்கவும்...!!!

இது வெறும் அரச பரம்பரை பற்றிய நிகழ்வுகளாக இல்லாமல், அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் பற்றிய பதிவும், அங்கு நிலவிய அரசியல் சூழலும், அந்த நாட்டின் சட்டதிட்டங்களும், ஆதிக்கம் செலுத்தும் மதகுருக்கள் பற்றியும், அங்கு நடந்த சட்ட மீறல்கள் என இப்புத்தகம் நிறைய பேசுகிறது, சுல்தானாவின் மூலமாகவே...

திரைப்படத்தில் வரும் ஃபிலேஷ்பேக் காட்சிகள் போன்று, சிலசமயம் பின்நோக்கி சென்று தன் தோழிகளின் கதைகள், அங்கு நடந்த சம்பவங்கள், சுல்தானாவின் பணியாளர்கள் பற்றிய வாழ்க்கை, தொழிலாளர்களின் நிலைமை, அரச குடும்பத்தின் பகட்டு வாழ்க்கை, ஆடம்பரம், திருமண முறை, என மிக அழகாக இதன் எழுத்தாளர் கோர்த்துள்ளார்... இதன் காரணமாகவே படிக்கும் நமக்கு ஒரு முழு தேசத்தை பற்றி அறிந்துக்கொள்ளும் திருப்தியை கொடுக்கிறது.


இந்த புத்தகம் உலக அளவில் சிறந்த விறபனை செய்த புத்தகங்களில் ஒன்று (International best Seller). நியூ யார்க் டைம்ஸ், பெண் எழுத்தாளர்கள் எழுதிய தலை சிறந்த 500 புத்தகங்களில் இதுவும் ஒன்று. (1300ஆம் ஆண்டிலிருந்து இன்று வரைக்கும் உட்படுத்தப்பட்ட பட்டியலில்)

இனி கதையாக இல்லாமல் சில சம்பவங்களை நான் கூறுகிறேன்.

நாம் அறியும் சில திடுக் செய்திகள்


1. மிகவும் பிற்போக்கான எண்ணம் கொண்ட ஆடவர்கள். பெண்களுக்கு முற்றிலும் கருத்துரிமை வழங்காத நிலை. அவ்வூர் பெண்கள், ஆண்களின் முன் பேசக்கூட மாட்டார்கள்

2. ஆண்களே அனைத்திலும் உயர்ந்தவர்கள் என்ற சமூக எண்ணம்

3. எந்த ஆடவனும் தாய் சொல்லை தட்ட மாட்டார்கள்

4. வசதி படைத்த பெரும்பாலானோர் 4 மனைவிகளுடன் தான் வாழ்கிறார்கள். அனைவரையும் ஒன்றாக பாவிக்க வேண்டும் என குரான் கூறுவதாக அறிகிறேன்.

5. இருப்பினும் மனைவிகளுடன் ஏற்ற தாழ்வுகள் நிறைய உண்டு.

6. சுழற்சி முறையில் தினமும் ஒரு மனைவி வீட்டிற்கு செல்ல வேண்டும். இன்று முதல் மனைவி, நாளை இரண்டாவது மனைவி என வரிசையாக. இருப்பினும் இளைய மனைவியுடன் சிலர் பெரும்பொழுதை கழிக்கிறார்கள். ஆனால் ஆடவனை எதிர்த்து கேட்க யாருக்கும் துணுவு இல்லை.

7. பெண்களை வெறும் பிள்ளை பெறும் மிஷின்களாக எண்ணுவது

8. அங்கும் மாமியார், மருமகள் பேதம் இருப்பதாக அறிகிறோம். இது சர்வதேச பிரச்ச்னை போல :) :)

9. பெண்கள் பூப்பெய்தவுடன், அபயா எனும் பர்தா போட்டுக்கொள்கிறார்கள், நம்மூரில் தாவணி அணுவது போல. அதில் பல வேலைப்பாடுகள், மாறுபாடுகள் இருப்பது படிக்கையில் ஆச்சர்யம் அளிக்கிறது.

10.  பெண்கள் எந்நேரமும் அபயா அணிந்துதான் இருக்க வேண்டும். தன் வீட்டில் இருக்கும் சமயத்தை தவிர. அதிலும், உறவினர்கள் வந்தால் அபயா போட்டுக்கொள்ள வேண்டும். ஆண்கள் முன்னால் முகத்தை எக்காரணம் கொண்டும் காட்டக்கூடாது என கட்டுப்பாட்டுடன் வளர்க்கிறார்கள்


 11. வீட்டு ஆண்களின் (தந்தை அல்லது கணவர்) அனுமதி இல்லாமல், பயணம் செய்ய இயலாது.

12. பாஸ்போர்ட் போன்ற ஆவனங்கள் ஆடவர்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். ஆண்கள் துணையில்லாமல் பயணிப்பது கடினம். அவ்வாறு இல்லாமல் பயணிக்க நேர்ந்தால், அவர்களிடம் No Objection கடிதம் வாங்கி ஏர்போர்டில் சமர்பிக்க வேண்டும்

13.  பெண்கள் வண்டியோட்ட தடை. குடும்ப தலைவரின் நம்பிக்கையான டிரைவர்கள் மூலமாகத்தான் செல்ல வேண்டும் அல்லது குடும்பத்தின் ஆணுடன் தான் செல்ல வேண்டும்.

14. கல்வி என்பது பெண்களுக்கு முற்றிலும் மறுக்கப்படுகிறது. இருப்பினும்  அரச பரம்பரையில் இருப்போருக்கு தனி ஆசிரியர் மூலமாக அடிப்படை கல்வி அளிக்க சவுதி அரசரின் மனைவியின் நிர்பந்தத்தின் காரணமாக பயன் கிடைக்கிறது

15.  பெண்கள் எந்நேரமும் கணவனின் ஆசையை பூர்த்தி செய்பவளாக இருக்க வேண்டும்

16.  ஆண்கள் நினைத்தால் எப்பொழுது வேண்டுமென்றாலும் தன் மனைவியை டைவர்ஸ் செய்யலாம். அவ்வுரிமை பெண்களுக்கு இல்லை... நிறைய நடைமுறைகள், விதிமுறைகள் இருக்கின்றது

17. முட்டாவாஸ் (Mutawas) எனும் மதகுருக்கள் மிகுந்த சக்தி படைத்தவர்களாக திகழ்கிறார்கள்.

18. மதகுருக்கள் தான் தீர்ப்பும் வழங்குகிறார்கள். தங்களுக்கென ஒரு கலாச்சார குழு பாதுகாவலர்களை கொண்டுள்ளார்கள். அங்கு நடைபெறும் கலாச்சாரத்தின் மீறல்களை தடுக்க.

19. அரசனே மதகுருக்களை கண்டு அஞ்சும் நிலை நீடிக்கிறது

20. ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என அவர்கள் சமூகத்தில் இருக்கிறது

21. புனித நூல் குரானின் சில கருத்துகளை தவறாக புரிந்துக்கொண்டவர்களாக, ஆணாதிக்கத்தின் உச்சம் பெற்றவர்களாக ஆண்கள் இருக்கிறார்கள் என சுல்தானா கூறுவதில் அறிகிறோம்.

22. ஆண்கள் தனக்கு 20-50 பிள்ளைகள் இருந்தால் அது தங்களின் கௌரவத்தின் சின்னம் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதை பெருமையாக நினைத்துக் கொள்கிறார்கள்.

23. குழந்தை திருமணம் சர்வசாதாரணமாக நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது.

24. பூப்பெய்த ஒரு வருடத்திற்குள்ளாகவே பெரும்பாலும் எல்லா பெண்களுக்கும் கல்யாணம் ஆகிவிடுகிறது.

25. 50 வயதோ அல்லது 60 வயதோ உடைய ஆண்கள், சர்வ சாதாரணமாக 16 வயது பெண்களை மூன்றாம் தாரமாகவோ நான்காம் தாரமாகவோ மணமுடிக்கிறார்கள்

26.இன்னும் நிறைய இருக்கு. புத்தகத்தை படித்தால் பலப்பல அதிர்ச்சிகள் காத்துக்கொண்டிருக்கிறது.

முரண்கள்

1. என்ன தான் சட்டம், ஒழுங்கு அனைவருக்கும் சமம் என கூறினாலும், அதிகாரம் பொருந்திய அரச குடும்பத்தினர் இதில் இருந்து எளிதில் தப்பிக்கிறார்கள்.

உதாரணத்திற்கு, அமேரிக்காவில் படித்த ஒரு இளவரசர், சவுதி சட்ட திட்டங்களுக்கு உட்படாமல் மேற்கு வாழ்க்கையின் முறையில் ஈர்க்கப்பட்டு, அடங்க மறுக்கிறார். மதுபானத்தை தன் சொந்த நாட்டுக்கு கடத்தி தொழில் செய்கிறார். அவ்வாறான ஒரு சமயம், மதகுருக்களிடம் மாட்டிக்கொள்கிறது இவருக்கு சொந்தமான வண்டி. நடவடிக்கை என்று பார்த்தால், மிகக்கடுமையாக இருக்க வேண்டும். அரச பரம்பரையின் குறுக்கீட்டால் தண்டனை ஏதும் இல்லாமல்,கமுக்கமாக விஷயத்தை அமுக்கி பக்கத்து ஊருக்கு கட்டிட காண்டிராக்ட் செய்யும் தொழில் அமைத்து அதில் வாழ வழிவகை செய்கின்றனர்.இது போல் நிறைய சம்பவங்கள் இதில் இடம் பெறுகிறது

2. மதுவகைகள் அந்நாட்டில் தடை செய்யப்பட்ட ஒன்று. மது அருந்துவது ஒரு பெரிய குற்றமாக கருதப்படுகிறது. ஆனால் சுல்தானா கூறுகையில், அவர்களுக்கிடையேயான விருந்தில் விலை உயர்ந்த மதுவகைகள் இல்லாத பார்ட்டிகள் மிக அறிது என்கிறார்.

3. எந்த வழக்காக இருந்தாலும், ஆண்கள் சொல்லும் சாட்சியம் தான் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.அதனால் ஆண்கள் செய்யும் தவறுகளுக்கு பெண்களை எளிதாக குற்றவாளியாக்குகிறார்கள்.

உதாரண சம்பவம் - சுல்தானா பிரசவத்திற்கு ஆஸ்பத்திரியில் இருக்கையில், பக்கத்து அறையில் ஒரு பெண் சகல போலீசோடு அட்மிட் செய்யப்படுகிறாள். ஏதேனும் அரச குடும்பத்தினரா என விசாரிக்கையில் அவள் ஒரு கைதி, குழந்தை பெற்ற பின் அவளை நேரே ரோட்டிற்கு சென்று கல்லால் அடித்து கொள்ளும் தீர்ப்பு அளிக்கப்படுகிறது. சுல்தானா அவள் கதையை அறிகிறாள். வெறும் 16 வயதைக் கடந்த பெண் அவள்...

அவளின் சகோதரன், தன் பெற்றோர் இல்லாத சமயத்தில் தன்னுடைய நண்பர்களுக்கு இரவு விருந்து அளிக்கையில் பாட்டின் சத்தம் தாங்கிக் கொள்ள முடியாமல், கீழே சென்று அதை குறைக்க முறையிடுகிறாள். நண்பர்கள் அனைவரும் செம போதையில் இருக்கையில் இவலை சின்னா பின்னப்படுத்துகிறார்கள்... சகோதரன், பாத்ரூம் சென்றிருக்கையில் நடக்கும் சம்பவம்... இவள் எவ்வளவு முறையிட்டும், மதுவின் காரணமாக அவர்கள் கேட்கவில்லை. இவளின் கதறல் சத்தம், ஸ்பீக்கரின் சத்தத்தால் வெளியில் கேட்கவில்லை. சகோதரன் போதை தெளிந்து பார்க்கையில் தன் தங்கையின் நிலையை காணுகிறான். விபரீததை உணர்ந்த அவன், மது விருந்து விஷயத்தில் இருந்து தப்பிக்க நண்பர்களின் நாடகத்திற்கு ஒத்துழைக்கிறான். இப்பெண் தங்களை செக்‌ஷிற்கு தூண்டியதாகவும், வேண்டாம் என்று ஒதுங்கையில் விடாமல் தங்களை டீஸ் செய்ததாகவும் மதகுருக்களுடமும், பெற்றோர்களிடமும் கூறுகிறார்கள்.... இந்த சாட்சியத்தை ஏற்று இவளுக்கு கல்லடிப்பட்டு சாகும் தண்டனை வழங்குகிறார்கள்..குழந்தை ஈன்ற சில மணித்திளியில் கொடூரமாக சாகிறாள், ஒன்னும் செய்யாத அறியா பொண்ணு.

4. தாயை போற்றினாலும், பெண்களுக்கான அநீதி அதிகம் நடக்கும் ஊர். ஃபிலிப்பைன்ஸ், தாய்லாந்து நாட்டில் இருந்து செக்ஸ் கொத்தடிமைகளை, வீட்டு வேலை வாங்கி தருவதாக பொய் சொல்லி வர வைக்கிறார்கள்.அவ்வாறான ஒரு பணிப்பெண்ணின் தோழியின் கதை கண்ணீர் வரவழைக்கிறது. இருண்ட அரையில் அடைத்து, அவர்கள் வேண்டும் பொழுது இன்பத்தை அனுபவித்து கொடுமைப்படுத்துகிறார்கள்.

5. நிறைய ஆண்கள், வெளியூர் பயணம் அடிக்கடி செய்யும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். சிலர் அங்கு கிடைக்கும் கட்டற்ற சுதந்திரம் அனுபவிக்கவே பெரும்பாலும் செல்கிறார்கள். ஆனால் அவர்களே உள்ளூரில் கடுமையாக நடந்துக்கொள்கிறார்கள். பணம் இருந்தால் அனைத்தும் சாத்தியம் என்ற எண்ணம் சிலருக்கு உண்டு.

இது சில சம்பவங்களே.. உங்க ஆர்வத்தை கெடுக்க விரும்பவில்லை. படிக்க சுவாரஸ்யம் குறைந்து போகுமாதலால் இங்கு விரிவாக சொல்லவில்லை.

சுல்தானா வாழ்க்கை சுருக்கமாக

 சுல்தானா குழந்தை பருவத்தில் தந்தை பாசத்திற்கு ஏங்குகிறார். தந்தைமார்கள், ஆண் பிள்ளைகளை தான் கொஞ்சுகிறார்கள். இதன் காரணமாக தன் மூத்த சகோதரனை வெறுக்கும் நிலை வருகிறது. மூத்த சகோதரனும் மூர்கமாக வளர்கிறான். பெண்களை பற்றி கீழ்தரமான எண்ணங்களோடு.

சுல்தானாவின் அக்கா சாராவிற்கு 53 வயதான நபருடன் திருமணம் நடைபெறுகிறது. அதில் திருமண சம்பர்தாயங்கள், பெண்ணிற்கு இளைக்கப்படும் அநீதி என அனைத்தும் இடம்பெறுகிறது. சில காலத்தில் தற்கொலைக்கு முயன்று மீட்கப்படுகிறாள். அவள் கணவன் மிகவும் செக்ஸ் டார்சர் கொடுத்தபடியால் இந்த விபரீத முடிவு. சில்தானாவின் அம்மாவின் பிடிவாதத்தின் காரணமாக தன் அக்கா மீட்கப்படுகிறாள். பின்பு அவள் கணவர் விவாகரத்து செய்து விடுகிறார்.

சுல்தானாவின் மனதில் திருமணம் பற்றிய அச்சங்கள் ஆழ்மனதில் தொற்றிக்கொள்கிறது. திருமண வீட்டார் காண வருகையில் அடங்காபிடாரியாக நடந்துக்கொள்கிறார். ஒரு இனிய திருப்பமாக கல்யாணத்திற்கு முன்பாகவே கணவருடன் பேசும் பாக்கியம் பெறுகிறார். ஆச்சர்யமாக சுல்தானாவிற்கு அவரை பிடித்துவிடுகிறது. நன்கு படித்த, பெண்களை புரிந்து நடக்கக்கூடிய நபராக இருக்கிறார் (பெயர் கரீம்). 16ஆம் வயதில் தன் விருப்பப்படியே நல்ல இளம் கணவர் கரீமுடன் (27 வயது) கைக்கோர்கிறார்.

மாமியாரை அவமானப்படுத்தியதை மனதில் வைத்துக்கொண்டு அவர் பழி வாங்க நினைக்கிறார். மாமியார் மருமகள் சண்டை அரங்கேறுகிறது. சிலப்பல சண்டைக்கிடையே கர்பமாகிறாள். வாழ்க்கை நன்று செல்கிறது. கரீமுடன் எழுத்து பூர்வமாக எழுதி வாங்கிக்கொள்கிறாள். இவர்களுக்கு ஒரு பையனும், ரெண்டு பெண் குழந்தைகளும் பிறக்கிறது.

இடையில் மார்பக புற்றுநோய் தாக்க,  இதற்கும் தகுந்த சிகிச்சை பெற்று குணமாகிறாள். ஆனால் பிள்ளை பேறு பெற இயலாது என மருத்துவர்கள் கூறிவிடுவதன் காரணமாக....அவள் கணவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய நினைக்கையில் வாழ்க்கை தடம் புரள்கிறது.

அதை எப்படி சமாளித்தாள், அவள் செய்த காரியங்கள் அனைத்தும் விறுவிறுப்பான திரைப்படத்திற்கு ஒப்பானவை.

இதனூடே தன் அக்கா சாராவின் வாழ்க்கையில் அடிக்கும் வசந்தம், அவர்கள் காதல், பிள்ளை பெறுகையில் இருக்கும் ஆடம்பரம் என சுவையான ஒரு புத்தகம்....

இன்றைய சவுதியின் நிலையும், சுல்தானாவின் நிலை அறியவும
 இப்புத்தகம் பதிப்பித்து ஒரு 20 வருடங்கள் ஆகிறது. இப்பொழுது சுல்தானா நலமாக இருக்கிறாளா? அவளுக்கு இப்புத்தகத்தின் வெளியீட்டின் மூலமாக தன் வாழ்க்கைக்கான அச்சுறுத்தல் இருந்ததா? தற்பொழுது சவுதியில் நிலைமை மாறியிருக்கிறதா? சுல்தானா தரும் விவரங்கள் மிக துள்ளியமனவை. எளிதில் குடும்ப உறுப்பினர்கள் அடையாளம் காண முடியும், அதனால் தற்பொழுது அவளின் கதி என சில கேள்விகளை முன் வைத்து ஜீன் சேசனிடம் கேட்டேன். அவரின் பதில்கள் கீழே...

Hi Hari, Thanks for telling me this… I’m so glad that the true story of a Saudi princess is informative and has put you to thinking about the lives of women behind the veil.

Saudi Arabia is changing but certainly not fast enough. The truth is this: A Saudi woman can have a good life If the men in her family are kindhearted and caring about females. I know Saudi women who live absolutely good lives — they are educated and pursuing many good things. On the other hand, I hear true stories of young girls and women who are suffering terribly because the men of the family are still very backward in their thoughts. It’s a world filled with contradictions with some women being educated and working and fulfilling their dreams and other women are being abused and even murdered by the men in their family.

Yes, her immediate family knows who she is — you can read the full story in the sequel to PRINCESS (there are three books about Princess Sultana and her family & friends. ALl should be available a the bookstores in Dubai).

I hope this answers your questions and feel free to write to me anytime. Thank you, again…. Jean
--------------------------------------------------------------------------------------------------

'The Princess' - புத்தகம் பற்றிய பார்வை (பகுதி-1)

'The Princess: A True Story of Life Behind the Veil in Saudi Arabia' by Jean Sasson


இப்புத்தகத்தை டுபஜார் எனும் ஆன்லைன் புத்தக வெப்சைட்டில் தான் முதலில் கண்டேன். அதன் சிறுகுறிப்பில், ‘ஒரு சவுதி நாட்டு இளவரசியின் சுயசரிதை’ என்று படித்தேன். நம் எல்லோருக்கும் இருக்கும் கியூரியாசிட்டி, பிரபலங்களின் வாழ்க்கையை அறிந்து கொள்வதில் ஒரு அலாதி ஆனந்தம் இருக்குமே...!! அதன் பயனாக எனது ஆவல் பீறிட்டு வந்தது... 

மேலும்,  மண்டைக்குள் சவுதி நாட்டின் சட்டதிட்டம் மிகக்கடுமையாச்சே..!! அது எப்படி? சவுதி நாட்டில் இருக்கும் ஒரு அரபி பேசும் இளவரசி, அமேரிக்க நாட்டு எழுத்தாளருடன் தன் எண்ணங்களை பகிர்ந்து, எப்படி எழுத முடியுமென்று.(ராஜ பரம்பரையில் உள்ளவர்களை சுற்றி பல குண்டா தடியன்கள், அதாங்க பாடி கார்ட் இருப்பாங்களே). ஒரு வேலை அப்படி எழுதிவிட்டு, எப்படி இந்த இருவரும் அங்கு உயிர் வாழ முடியும்? என்பது அடுத்த கேள்வியாக தோண்றியது.... இக்காரணிகளே இப்புத்தகத்தை வாங்க பேராவலை தூண்டியது.

எழுத்தாளரை பற்றி



சுல்தானா என்ற இளவரசியின் கதையை உள்வாங்கி எழுதிய ஜீன் சேஷன்,  ஒரு அமேரிக்க பெண் எழுத்தாளர். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். இவரின் ஸ்டைல், மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் பெண்களின் உண்மைக் கதைகளை மையமாக கொண்டதாக இருக்கும். இது வரை 11 புத்தகங்கள் எழுதியள்ளார் என நினைக்கிறேன், அனைத்தும் இப்பகுதிகளில் வாழும் பெண்களின் போராட்ட வாழ்க்கையும், அவர்கள் எதிர்கொண்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டவைகளே....

சதாம் உஷேன் படைகளிடம் அகப்பட்ட பெண்ணின் கதை, குவைத் போரில் சீரழிந்த பெண்னின் கதை, சுல்தானா இளவரசியின் வாழ்க்கை தொடர்ச்சுயாக 3 புத்தகங்கள், ஒசாமா பின் லேடனின் மகன் பற்றிய கதை (Growing up with Bin Laden) என ஏராளம்...

புத்தகம் படிக்கும் முன் என் எண்ணம்

 இதுநாள் வரை, துபாயில் பர்தா அணிந்து நம்மை கடந்து போகும் அரபி பெண்களை பார்த்தால்.... இவர்களுக்கென்ன ராஜ வாழ்க்கை, சொகுசு பங்களா, ஹ்ம்ம் என்றால் ஓடி வந்து வேலை செய்ய பல ஆட்கள், பணக்கஷ்டம் என்றால் என்னவெண்று தெரியாத ஒரு ஆடம்பர வாழ்வு, என கண்டு வியந்துள்ளேன், இல்லை இல்லை பெருமூச்சு விட்டுள்ளேன் இதுநாள் வரை... இந்த புத்தகமும் அவ்வாறான ஒரு ஆடம்பர வாழ்க்கை முறையை கூறும் என்று நினைத்த எனக்கு, படிக்க படிக்க பல்வேறு திடுக் திடுக் ஷாக்...!!

நம்மையும் அறியாமல் சில நேரம் கோபம் பொத்துக்கொண்டு வருமே, அது போல ஒரு தருணம்... என்ன மாதிரி சமூகம்டா இது..? என்ன வாழ்க்கைபா இது ? சுதந்திரமே கிடையாதா? பெண்கள் என்ன கொத்தடிமைகளா?? மனசாட்சியே இல்லையா இவர்களுக்கு? வெளிநாட்டவர்களுக்கும் இவ்வளவு ஜீரனிக்க முடியா கஷ்டங்களா? இன்னும் பலப்பல கேள்வி கணைகள் உங்களை நிச்சயம் போட்டு பிராண்டும், இந்த புத்தகத்தை படித்தால்.... சரி புத்தகத்தினுள் இனி செல்வோம்.

முதல் முடிச்சு
எனது முதல் கேள்வியான, இது எப்படி சாத்தியம் என்பதற்கு எழுத்தாளரின் குறிப்பிலேயே விடை கிடைத்தது. இவர் 1978ஆம் ஆண்டு சவுதியில் வேலை நிமித்தமாக செல்கிறார். தொடர்ந்து 4 ஆண்டுகள் King Faisal Specialist Hospital என்ற ஆஸ்பத்திரியில் உயர்ந்த நிர்வாக அலுவலராக பணியாற்றுகிறார். அதன் மூலமாக பல அரச குடும்பத்தினரிடம் பழக்கம் ஏற்படுகிறது. அவர்களின் நலன்விரும்பியாகவும் மாறுகிறார். அதன் பொருட்டு சில விருந்துகளில் பங்கேற்கையில் 1982ல் சுல்தானாவிடம் பழக்கம் ஏற்படுகிறது. 9 வருடம் நட்பின் நம்பகத்தன்மை காரணமாக சுல்தானா என்ற இளவரசி, தன் கதையை உலகம் அறிய வேண்டும் என்ற ஆவலை தெரிவிக்கிறார். நிர்பந்தத்தின் பயனாக கதை எழுத தீர்மானித்து அனைத்து தகவல்களையும் கோர்க்கிறார்.

ஆனால் இவையனைத்தும், அரச குடும்பத்திற்கு தெரிந்தால் மொத்த ஆட்களும் காலி. அதனால் புத்தகத்தில் குறிப்பிடும் அனைத்து பெயர்களும் புனைப்பெயர்களே...சுல்தானா உட்பட. ஆனால சம்பவங்கள், காட்சிகள் உண்மையானவை.

மேலும், எழுத்தாளரின் நட்புகள், நெருங்கிய வட்டம் என அனைவரும் சவுதி நாட்டை விட்டு வெளியேறும் வரை காத்திருந்து 1991ஆம் ஆண்டு, இவரும் சவுதியை விட்டு அமேரிக்காவிற்கு மீண்டும் குடிபெயர்கிறார். அங்கு சென்றடைந்தபின் தான், முழு புத்தகத்தை 4, 5 மாதத்தில் எழுதி பதிப்பிக்கிறார்.
அப்போ சுல்தானாவின் கதி ?? என்ற கேள்வி வரும் உங்க மனதில்.. எனக்கும் தான், அதற்கான பதில் இறுதியில்..

சுல்தானா - இளவரசி

 21,000 அரச உறுப்பினர்கள் (மாமன், மச்சான், சித்தப்பா, பெரியப்பா, அவர்களின் வாரிகல், கிளைகல் என) உள்ள மாபெரும் அரச பரம்பரையில் வாழும் ஒரு பெண். தன் பால்ய நாட்களில் தொடங்கி தான் சந்தித்துவந்த இன்னல்களை, வாழ்க்கை முறையை நமக்கு அப்படியே அப்பட்டமாக தோலுறித்து காட்டுகிறது.

சுல்தானா, சிறுவயதிலிருந்தே மிகமிக துடிக்கானவள். சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள், பழமைகளை அகற்றி புதுமையை புகுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள். ஆனால் இதை சாத்தியப்படுத்துவது அரிதான் ஒன்று. ஏனெனில் தான் வாழ்வது இரும்புக்கோட்டைக்குள், ஆணாதிக்கம் மிகுந்த ஒரு நாட்டில், சமூகத்தில்....

தன் சகோதரனுக்கு கிடைக்கும் கவனிப்பு, மரியாதை பெண்ணாக பிறந்ததால் இவளுக்கு கிடைப்பதில்லை. அதன் காரணமாகவே அவனை வெறுக்க ஆரம்பிக்கிறாள்...

குடும்பத்தின் ஆண் தான் அனைத்தையும் தீர்பானிக்கும் நபர். பெண் என்பவளுக்கு பேசவோ, தன் கருத்தை சொல்லவோ அனுமதியில்லை. அதே போல் பெண்களின் தலையாய கடமை தகப்பனுக்கு, கணவனுக்கு அடிப்பனிந்து செல்வதே. திருமணமான பெண், தன் கணவனின் இச்சைகளுக்கு எந்நேரமும் தயாராக இருக்க வேண்டும். அவர்களின் தலையாய கடமை, பிள்ளை பெற்று தருவதே... அதிலும் ஆண் பிள்ளைகள் தான் பெற்று தர வேண்டும். பெண் பிள்ளை பெற்றால் இளக்காரமாக பார்க்கும் சமூகம்.... ஆண் பிள்ளைகள் பெரும் பெண்களுக்கு தான் கணவனின் சிறப்பு கவனிப்பு என இன்னும் நிறைய இருக்கிறது.

அடுத்த பகுதியில் இன்னும் விரிவாக என்னை திடுக்கிட்ட சம்பவங்களை ஒன்றின் பின் ஒன்றாக தொகுக்கிறேன்.